கவிஞர் ஜீவி என்கிற ஜி.வெங்கட்ராமன்
புதுக்கோட்டை துணை இயக்குனர் ( தொழுநோய் ) அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளாராகப் பணிபுரிகிறார். என் எழுத்துகளை யார் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது., ஏன் எழுதுகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது', என்று எழுதுவது பற்றி 'தெளிவாக' கருத்துகளைப் பகிரும் படைப்பாளர்களிடையே, தன் எழுத்துகளை படிக்கும் வாசகன் யார், தன் எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது, எழுதுவதன் சமூகத் தேவை என்ன என்பது பற்றிய சரியான புரிதல்களோடு கால் நூற்றாண்டு காலமாக தமிழில் கவிதைகள் எழுதிவரும் கவிஞர் ஜீவி பொது சுகாதாரத்துறையை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடியது.
சமீபகாலமாக ”டைம்ஸ் ஆப் இந்தியா ” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும்
ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு. (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு..... (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
பாடல் அறிவொளி இயக்க காலத்தில் இவர் எழுதியது தான்.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மர்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
வாழ்வை சரியான கோணத்தில் பார்ப்பதும்,அதனை பதிவு செய்வதும் இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கிறது.
உதாரணமாக:
மீறல்
அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.
தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !
ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?
(நைலான் ஊஞ்சல்)
இன்னொரு கவிதையில் ...
பித்தளை சட்டிகளுக்கு
புளிச்சக்கை.
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர் .
வெள்ளி பாத்திரங்களுக்கு
விபுதி மட்டும்.
பளபளவென
விளக்கி வைக்கும் அம்மாவால்
கடைசிவரை விளக்கவேமுடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை...............
ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளா
கவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.” என தானும் எழுதுவதோடு சக கவிஞர்களை கைபிடித்து தடம் பார்த்து அழைத்துச் செல்லும் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.
படிக்கும் வாசகனின் கண்களைக் கட்டி, இருட் புதருக்குள் இழுத்துப் போகும் பம்மாத்துத் தனங்கள் இல்லாமல், வாசகனருகே சக நண்பனாய் அமர்ந்து தோள்மேல் கைபோட்டு சிநேகமாய்ப் பகிர்ந்து கொள்ளும் எளிய-இயல்பான மொழியிலான கவிதைகள் ஜீவியினுடையவை.
இதுவரை வெளிவ்ந்துள்ள கவிதை தொகுப்புகள்:
- வானம் தொலைந்து விடவில்லை ( 1993)
- இருவேறு முகங்கள் (1996)
- நைலான் ஊஞ்சல் ( 2001)
- சின்னஞ்சிறகுகள் (2003)
- அஞ்சறைப்பெட்டி (2007)
கட்டுரைத் தொகுப்புகள்
- கவிதை குறித்த சொற்கள் (2008)
- கவிதையும் கவிதை சார்ந்தும் (2011)
தமிழ்நாடு முழுதும் பட்டிமன்றம் கவியரங்கம் வழக்காடுமன்றம் உரைவீச்சு போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்துவரும் இவர் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.(அப்போது தான் குறிஞ்சி மலைத்தேனே பாடல் எழுதப்பட்டது).
தமிழ் ஆட்சி மொழியாக 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை நடத்திய கவிதை போட்டியில் பரிசுபெற்றார்.
- கவிதைஉறவுபரிசு,
- தாரக அரக்கட்டளை பரிசு,
- ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள் பாராட்டுக்களை பெற்றவர்.
இந்த விருதுகளையெல்லாம் தாண்டி மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு இவரை மிகுந்த உற்சாகப்படுத்துகிறது என்கிறார்.ஒரு அரை மணிநேர பேச்சுக்காக 8 மணிநேரம் பிரயாணம் செய்து போக வேண்டியிருக்கும்,சில தருணங்களில் மேடைக்கு பின்புறமே முகம் கழுவி வந்த வேகத்தில் மேடை யேற வேண்டியதிருக்கும்.ஆனாலும் மக்களின் ஊக்கமும் தமிழின் ஆர்வமும் சளைக்காமல் இயங்கவைக்கிறது என்கிறார் ஒரு பேட்டியில்.முதல் நாள் இரவு இவரது பேச்சை கேட்ட ஒரு சாலையோர வியாபாரி பேருந்தில் அமர்திருக்கும் இவர் மடியில் இவர் கேட்காமலே போட்டுச்செல்லும் கடலை பொட்டலத்தை மக்களிடமிருந்து கிடைத்த விருதாக கருதும் இவர்
யாருக்காக இயங்குகிறார் எனத் தெளிவாக்குகிறது.முற்போக்கு முகாம் என்றாலே வரட்டு பிரச்சாரக் கவிதை என்கிற பார்வை சில புத்தி ஜீவிகளிடம் இருக்கிறது.அந்த கருத்துகளை தகர்த்தெரிகிறது இவரது கவிதைகள்.
உதாரணமாக
ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்
கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?
புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?
பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்
0
வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு
வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் !
இவர் சன் டிவி,பொதிகை,ஜெயா,மக்கள்,விஜய்,ராஜ்
என பல்வேறு தொலைக்காட்சி களில் பேட்டி அளித்துள்ளார்.
பல்வேறு வார,மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகைவருகிறது.
இணைய இதழ்கள் அம்பலம்,ஆறாம்திணை,இந்தாம் போன்றவைகளில் இவர் தன் பங்களிப்பை செய்துள்ளார்.
அப்துல்கலாம்,சுஜாதா ஆகியோர் இவர்து படைப்புகளை குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.
இதுவரை பேராசிரியர் மோகனசுந்தரம், பழனித்துரை ஆகியோர் இவரது கவிதைகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.
இவ்வளவு ஆளுமைகள் நிரம்பிய இவர் எமது பொதுசுகாதாரத்துறையில் பணியாற்றுகிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயம்.
ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.
'ஒரு
இரயில்எஞ்ஜினாய்
எப்போதும்இயங்கு.
கூடவேபலரைச்
சேர்த்துக்கொண்டு
உற்சாகமாகக்
கூவிக் கொண்டு...'
வாழ்த்துக்கள் ஜீவி
உஙகளுடன் கம்பார்ட்மெண்ட்டாக இருப்பது எங்களுக்கு பெருமிதம்